
Page 1 of 2
13. புயலுக்கு பின் – வினோதர்ஷினி

என்ன தான் மனம் கலங்கிய போதும் சாந்தியின் குணங்களான நிதானமும் பொறுமையும் அவளை விட்டு போகவில்லை. மனதில் ஏற்பட்ட பரபரப்பை வெளியில் காட்டாமல், அருணாவிடம் தங்கள் கம்பெனி வக்கீலை சென்று பார்த்து இந்த நோட்டிஸை பற்றி சொல்லிவிட்டு, சட்டப்படி அடுத்து என்ன செய்வது என்று கேட்க சொன்னாள்.
"அப்புறம் அருணா, நம்ம ஆபீஸ் அக்கவுண்டன்ட்டு கிட்ட கொஞ்சம் நம்ம கம்பனியோட தற்போதைய கரெக்டான பைனான்ஸ் நிலை பத்தி ஒரு ரிப்போர்ட் ரெடி பண்ணி தர சொல்றீங்களா?
"ஓகே மேடம். நான் இப்போவே போன் பண்ணி சொல்றேன். இன்னைக்கு வீட்டுக்கு போறதுக்கு முன்னாடி உங்க கிட்ட எடுத்துட்டு வந்து தரேன். "
"தேங்க்ஸ் அருணா..."
"சரி மேடம் நான் போய் வக்கீலை பார்த்து பேசிட்டு, பைனான்ஸ் ரிப்போர்ட்-ஐயும் வாங்கிட்டு வரேன்..."
அருணா சென்ற பின் சாந்தி, கடந்த சில நாட்களாய் நடந்த விஷயங்களை மனதில் அசை போட்டு பார்த்தாள். அரவிந்த் சில நாட்களாக டல்லாக இருந்ததின் காரணம் இப்போது புரிவது போல் இருந்தது. அவன் அன்று தன் நகைகள் பற்றி கேட்டதும் தான் கோபப்பட்டதும் நினைவில் வந்தது. அன்று பெரிதாய் தெரிந்த விஷயங்கள் இன்று உப்பு சப்பற்றதாய் தோன்றியது. அரவிந்திற்கு குணம் ஆனால் போதும்.. இந்த கம்பனி பிரச்சனையை சரி செய்ய தன்னால் முடிந்த வரை முயற்சி செய்து பார்க்க வேண்டும். அரவிந்தின் உழைப்பால் உருவானதை அவ்வளவு எளிதில் ஒரு கயவனுக்கு விட்டு தரக் கூடாது. மேலும் கவிதா இண்டஸ்ட்ரீஸ்ஐ நம்பி பல குடும்பங்களும் இருக்கின்றன..... தன்னால் முடிந்த வரை எல்லாவற்றையும் சரி செய்ய முயற்சிக்க வேண்டும்...
மனதில் ஒரு முடிவு எடுத்தப்பின் மனது சிறிது லேசாகிவிட்டதாக தோன்றியது. அரவிந்திற்கு நினைவு திரும்பிய பின், வழக்கம் போல் அவன் அருகிலேயே இருந்தாள். இந்த பிரச்சனை பற்றி அவனிடம் இப்போதே எதுவும் சொல்ல அவள் விரும்பவில்லை. வழக்கம் போல் நர்ஸ் வந்து அவனுக்கு மருந்தை கொடுத்து, அவன் உறங்கிய பின்னரும், அவன் அருகிலேயே அமர்ந்திருந்தாள். அவன் தூங்கும் போது கூட, அவன் அருகில் அமர்ந்திருந்தால், மனதிற்கு தெம்பாக இருந்தது.
இரவு எட்டு மணி அளவில் அருணா வந்தாள்.
"சாரி மேடம் கொஞ்சம் லேட்டாகி விட்டது.."
"பரவாயில்லை அருணா, நான் தான் உங்க கிட்ட தேங்க்ஸ் சொல்லணும்... இந்த மாதிரி ஒரு நிலைமையில உங்கள மாதிரி, நம்பகமா ஒருத்தங்க இருக்கிறது ரொம்ப உதவியா இருக்கு...."
"என்ன மேடம், பெரிய வார்த்தை எல்லாம் சொல்றீங்க..? ம்ம்ம்ம்.... ஆனால் இப்போ நான் சொல்ல வந்தது அவ்வளவு நல்ல விஷயம் இல்லை..."
இது சாந்தி எதிர்பார்த்தது தான் என்பதால், அவளுக்கு ஒன்றும் அதிர்ச்சியாக இல்லை..
"பரவாயில்லை அருணா சொல்லுங்க..."
"நம்ம வக்கீல் சேகர் ஊரில இல்லை..... அவருடைய மனைவியோட ட்ரீட்மென்ட்க்கு வெளியூர் போய் இருக்கார். அவர் ஆபீஸ்ல இருந்து அவர் கிட்ட பேசினேன். அவர் நமக்கு எந்த ஹெல்ப் வேணும்னாலும் அவருடைய அஸ்ஸிஸ்டெண்ட் ஆனந்தி கிட்ட கேட்க சொன்னார். அவங்ககிட்ட பேசி அவங்க ஆபீஸ் அட்ரஸ் வாங்கிட்டேன். நாளைக்கு போய் பார்த்து பேசணும்.... அப்புறம் இது தான் மேடம், நம்ம பைனான்ஸ் ரிப்போர்ட்.... உங்களுக்கே தெரியும் சில ஆர்டர்ஸ் எல்லாம் இன்னும் டெலிவரி ஆகாமல் இருக்கு... அதனாலே..."
"ம்ம்ம் தெரியும் அருணா... பை தி வே நாளைக்கு போய் நாம அந்த சுந்தர மீட் பண்ணலாமா? உங்களுக்கு அவர் வீடு தெரியுமா?
"அவரோட அட்ரஸ் கண்டு பிடிக்கிறது ஒன்னும் கஷ்டம் இல்லை மேடம்... ஆனால்..."
"என்ன????"
"இல்லை அவர் ஒரு மாதிரி... அவரை போய் நாம பார்க்கனுமா??"
"நானும் கேள்வி பட்டிருக்கிறேன் அருணா, ஆனால் இந்த பிரச்சனைக்கு எல்லாம் முக்கிய காரண கர்த்தா சுந்தர் தான். அதனாலே அவரை போய் பார்த்து, பணத்தை திருப்பி தர கொஞ்சம் டைம் கேக்கலாம்ன்னு நினைக்கிறேன்..."
"சரி மேடம்... நாளைக்கு போகலாம்..."
"நாளைக்கு காலையில ஒரு பத்து மணி மாதிரி போகலாம்... நீங்க சுந்தர் எங்க இருப்பார்ன்னு கொஞ்சம் விசாரிச்சு வைங்க... ஆனால் நாம அவரை சந்திக்க போறது அவருக்கு தெரிய வேண்டாம்."
"ஓகே மேடம்."
அதன் பின் அரவிந்தை பற்றி விசாரித்து விட்டு அருணா கிளம்பி சென்ற பின், சாந்தி கவிதா இண்டஸ்ட்ரீஸ்ன் ரிப்போர்ட்-ஐ படித்தாள். பின்பு மறுநாள் சுந்தரிடம் என்ன பேசுவது என்பதை பற்றி திட்டம் இட்டாள். இரவு ஒன்பது மணி அளவில் கற்பகத்திற்கு போன் செய்தாள். போன் அடிக்கும் சத்தம் கேட்டது... கவிதாவை பற்றி தான் விசாரிக்கவே இல்லை என்பதை எண்ணிய போது மனதில் குற்ற உணர்ச்சி ஏற்பட்டது.
"ஹலோ" கற்பகத்தின் குரல் கேட்டது.
"ஹலோ அத்தை நான் சாந்தி பேசுறேன். சாப்டீங்களா?"
"என்னை பத்தி கவலைபடாத சாந்தி... அரவிந்தை டாக்டர் வந்து பார்த்தாரா? ஏதாவது சொன்னாரா?"
"ஆமாம் அத்தை வந்து பார்த்தார்.. இன்னைக்கு செஞ்ச ஆபரேஷன் சக்சஸ்தான்... பயப்பட எதுவும் இல்லைன்னு சொன்னார்?"
"நீ சாப்பிட்டாயா சாந்தி? உன் உடம்பையும் பார்த்துக்கோ.. நீ நல்லா தெம்பா இருந்தா தான் அரவிந்தை கவனிச்சுக்க முடியும்..."
இப்போது தான் மதியம் முதல் எதுவும் உண்ணவில்லை என்பது சாந்திக்கு உரைத்தது. அவளுக்கு பசி என்ற ஒன்றே மறந்து போய் இருந்தது. அதை பற்றி எதுவும் கற்பகத்திற்கு சொல்ல விரும்பாமல்,
"ஆமாம் அத்தை, நான் சாப்பிட்டேன்.... அப்புறம் கவிதா எப்படி இருக்கா அத்தை? தொல்லை பண்ணாமல் இருக்காளா? சாப்பிட்டாளா?"
"கவிதா சமத்து குழந்தை ஆச்சே... தொல்லை எல்லாம் எதுவும் பண்ணலை... சமத்தா ஹோம்வொர்க் எல்லாம் செஞ்சுட்டு சாப்பிட்டாள்.. உன்கிட்ட பேசணும்னு சொல்லிட்டு இருந்தாள்... இதோ அவள் கிட்ட கொடுக்கிறேன்.. "
கவிதாவிற்கு அன்னையிடம் பேசுவதில் மிகுந்த மகிழ்ச்சி என்பது அவளின் குரலில் தெரிந்தது. அன்னையிடம், தந்தையை பற்றி கேட்டு விட்டு, அதுவரை தாயிடம் சொல்லாமல் விட்டு வைத்திருந்த பள்ளியில் நடந்த நிகழ்வுகள் என அனைத்தையும் ஒப்பித்து முடித்தாள். அவள் சொல்வதை பொறுமையுடன் கேட்ட சாந்தி, அவளை இன்னும் சில நாட்கள், தொல்லை செய்யாமல் பாட்டியிடம் இருக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு, தொலைபேசியை, கற்பகத்திடம் கொடுக்க சொன்னாள்.
"ஹலோ சாந்தி?"
"அத்தை நாளைக்கு கம்பெனி சம்பந்தமா எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு... கவிதா ஸ்கூலுக்கு போன உடனே நீங்க இங்க வர முடியுமா? டிரைவர் கிட்ட சொன்னாள் உங்களை கொண்டு வந்து விடுவார்..."
"கட்டாயமா வரேன் சாந்தி..."
"தேங்க்ஸ் அத்தை.."
போனை வைத்தப் பின் தனக்கு உண்ண ஒரு பிஸ்கட் பாக்கெட் மட்டும் காண்டீனில் இருந்து வாங்கி வந்தாள். மீண்டும் நாளை செய்ய வேண்டியவற்றை எண்ணியபடி பிஸ்கட்டை உண்டாள்.
அருணா சொன்ன படி பத்து மணிக்கு முன்பே வந்து விட்டாள். சாந்தி, கற்பகத்திடம் கம்பனியின் பிரச்சனைகள் குறித்து எதுவும் சொல்ல வேண்டாம் என்று அருணாவிடம் சொல்லி வைத்தாள். அதனால், கற்பகம் வந்த பின் சாந்தியும் அருணாவும் பொதுவாக ஆபீஸ் விஷயமாக வெளியில் செல்வதாக சொல்லிவிட்டு, சுந்தரை சந்திக்க கிளம்பினார்கள். இருவரும், காரில் ஏறி அமர்ந்த பின், அருணா டிரைவரிடம், செல்ல வேண்டிய அட்ரஸை சொன்னாள்.
"சாரி அருணா, உங்களுக்கு வேற ஒரே அலைச்சல்." என்றாள் சாந்தி
புன்னகைத்த அருணா,
"நீங்க சொல்றதை பார்த்தால், நான் என்னவோ உங்களுக்கு சும்மா உதவி செய்ற மாதிரி இல்லை இருக்கு மேடம். நான் உங்க கம்பனியில் வேலை செய்பவள்..."
"ஆனால் இந்த வேலை நீங்கள் சும்மா பொழுது போக்குவதற்காக சேர்ந்தது தானே?"
"அதற்காக சும்மா இருக்க முடியுமா என்ன மேடம்? என்னால முடிந்த அளவிற்கு எல்லாம் செய்வேன்..."
"ரொம்ப தேங்க்ஸ் அருணா... சுந்தர் இப்போ அவர் வீட்டில தான் இருப்பாரா?"
"ஆமாம் மேடம், அப்படி தான், அவருடைய அஸ்ஸிஸ்டெண்ட் வாசு சொன்னார்.... வாசு எனக்கு பரிச்சயமானவர். கம்பெனி விஷயமா பல முறை பார்த்து பேசி இருக்கேன்."
"ஓ!"
"ஒரு நிமிஷம் மேடம்..... டிரைவர் காரை அந்த ரைட் சைடில நிக்கிற பைக் பக்கத்தில் கொஞ்சம் நிறுத்துங்க..."
டிரைவர் சொன்னதை செய்தார்...
- Prev
- Next >>


