
Page 1 of 2
1. மனம் விரும்புதே உன்னை

சஞ்சீவ் தயாராகி மாடியில் இருந்து இறங்கி வந்தான் .
"அண்ணி அண்ணி .. ரெடியா?"
"ரெண்டு நிமிஷம் சஞ்சீவ் " என்று கீதா தன் அறையில் இருந்து குரல் கொடுத்தாள்.
ஹாலில் உட்கார்ந்து பேப்பர் படித்து கொண்டிருந்த அவன் அன்னை காஞ்சனா, காலை எட்டு மணிக்கே அதிசயமாக எழுந்ததோடு மட்டும் அல்லாமல் வெளியே செல்ல வேறு தயாராக இருந்த தன் இரண்டாம் மகனை அதிசயமாகபார்த்தாள்.
"என்னடா சஞ்சீவ் அதிசயம்... ஒன்பது மணிக்கு முன்னாடி பெட்ல இருந்து அசையவே மாட்ட.. இப்படி எட்டு மணிக்கே ரெடியாகி இருக்கிற?
"என்னம்மா செய்யறது.. என்னோட ஹாஸ்பிட்டல்ல இன்னைக்கு வெளிநாட்டுல இருந்து சில ஸ்பெஷலிஸ்ட்ஸ் வர்றாங்க... என்ன தான் எனக்கும் அதுக்கும் சம்மந்தம் இல்லைன்னாலும் ஒரு எம்-டி யா நான் போகாட்டி நல்லஇருகாதில்லை? அதான் அண்ணியை சீக்கிரம் எழுப்பி விட சொன்னேன். அண்ணியும் வெளிய போகணும்னு .."
"அது எனக்கு தெரியும்டா.. உங்க அண்ணி என்கிட்டே சொல்லாம எதுவும் செய்யவும் மாட்டா, எங்கேயும் போகவும் மாட்டா"
காஞ்சனாவின் குரலில் இருந்த பெருமையை கவனித்தவன், அண்ணனின் காதல் பற்றி தெரிந்த போது இதே அன்னை செய்த ஆர்பாட்டங்கள் நினைவு வரவும் ,
"இதுக்கு தான் அம்மா லவ் மேரேஜ் செய்துக்கணும்.. பாருங்க அண்ணி அண்ணனையும் நல்லா பார்த்துக்குறாங்க உங்க கிட்டயும் அன்பா மரியாதையா நடந்துக்குறாங்க..." என்றான் நக்கலாக
காஞ்சனா அவனுக்கு கோபமாக பதில் சொல்லும் முன், சஞ்சீவ் சொல்வதை கேட்டபடி வந்த கீதா,
"என்ன சஞ்சீவ், இன்னைக்கு நான் தான் உங்களுக்கு விளையாட கிடைச்சேனா?"
மருமகளை கண்ட உடன் காஞ்சனாவின் முகம் மலர்ந்தது..
"வாம்மா கீதா, அவன் விளையாட்டுத்தனமாக சொன்னாலும் உன்னை பத்தி சொன்னது எதுவும் தப்பு இல்லை. உன்னை மாதிரி ஒரு மருமகள் கிடைக்க எங்க குடும்பமே கொடுத்து வச்சிருக்கணும். அடுத்து வருபவளும் இதே போலஇருந்தா நல்லா தான் இருக்கும். என் தம்பி மகள் கண்மணி..."
"ஐயோ அம்மா திரும்ப ஆரம்பிக்காதீங்க கண்மணி எனக்கு ஒரு தங்கை மாதிரி... இந்த மாதிரி பேசுறதை இதோடு நிறுத்துங்க... அண்ணி நீங்க ரெடியா? போலாமா?
"டேய் இப்படியே பேசிட்டு இருந்தா உனக்கு கல்யாணம் ஆன மாதிரி தான்... சரி அதை விடு ஏதோ வெளிநாட்டுல இருந்து யாரோ வராங்கன்னு சொன்னியே கொஞ்சம் நல்லா டிரஸ் பண்ணிட்டு போக கூடாதா? இன்னைக்குமா இந்த ஜீன்சும் டீ ஷர்டும்? அதுவும் மஞ்சள் கலர்ல?"
"இது எல்லாம் ரொம்ப ஓவர் அம்மா... ஏதோ அவங்க வர்ராங்கன்னு நான் என் தூக்கத்தை தியாகம் செஞ்சதே பெரிசு.. வாங்க அண்ணி நாம கிளம்புவோம்... பை மம்மி ...”
"சரி அத்தை நானும் போயிட்டு வரேன்.,. ஏதாவது வேணும்னா என் மொபையிலுக்கு போன் போடுங்க.. காலையில போட வேண்டிய மாத்திரை இதோ இருக்கு... மதியம் போட வேண்டியதை எடுத்து உங்க ரூம் டேபிள் மேலவச்சிருக்கிறேன். கலாவிடமும் சொல்லி இருக்கேன். "
"அதெல்லாம் சரி தான் கீதா, நான் என்ன குழந்தையா? நீ உன் பிரெண்ட்ஸ் கூட சந்தோஷமாக டைம் பாஸ் பண்ணிட்டு வா..."
"சரி அத்தை நான் வரேன்.."
அதற்குள் காரை கிளப்பி விட்டு பொறுமை இன்றி ஹார்ன் அடித்து கொண்டிருந்தான் சஞ்சீவ்.
காரின் கதவை திறந்து அமர்ந்தவள்,
"அடடா சஞ்சீவ் கொஞ்சம் பொறுமை வேண்டும்.. அம்மா கிட்ட கொஞ்சம் அன்பா பொறுமையா பேசினால் என்ன? பாவம் அத்தை மாமா இறந்தப்புறம் உங்களையும் ராஜீவையும் எவ்வளவு கஷ்டப் பட்டு வளர்தாங்கன்னு உங்களுக்குதெரியும் தானே?"
காரை கிளப்பியவன், அண்ணியிடம்,
"அம்மா பாவம் தான் இல்லன்னு நானும் சொல்லலை அண்ணி... அப்பா மட்டும் எங்களுக்காக பணம் வச்சிட்டு போயிருக்காவிட்டால் ரொம்ப கஷ்டம் தான்.. அம்மா சொல்வது போல் மாமா உதவி செய்திருக்கிறார் தான்.. அதற்காக கண்மணியை நான் எப்படி கல்யாணம் பண்ணிக்க முடியும்? நாங்க ஊருக்கு போகும் போது அம்மாவோட அக்கா பசங்களும் வருவாங்க ... அவங்களோட நானும் ராஜீவும் கண்மணியும் சேர்ந்து விளையாடுவோம்.. அவங்க எல்லோரும் சகோதர சகோதரிகள் ஆனால் கண்மணி மட்டும் அப்படி இல்லை என்றால் எப்படி? சின்ன வயசில் இருந்தே எனக்கு அவள் மேல் ஒரு சகோதர வாஞ்சை தான்... அம்மா தான் புரிஞ்சிக்க மாட்டேங்குறாங்க... நீங்க தான்அண்ணி அவங்களுக்கு புரிய வைக்கணும். உங்களுக்கு ஒரு உண்மையை சொல்லட்டுமா அண்ணி எனக்கு கல்யாணத்தின் மேல் நம்பிக்கை இல்லை... இப்போ பாருங்க யாருக்கும் பதில் சொல்ல வேண்டாம்... எனக்கு பிடிச்ச மாதிரிடிரஸ்.. எனக்கு பிடிச்ச மாதிரி சாப்பாடு.. எனக்கு பிடிச்ச நேரம் தூக்கம்... பிரௌசிங் etc etc இதெல்லாம் எதுக்கு ஸ்பாயில் பண்ணனும்.."
இவ்வளவு நேரம் அவன் சொல்வதை கேட்டபடி இருந்தவள்... அவனின் கடைசி வாக்கியத்தை கேட்டு அதிசயமாக பார்த்தாள்..
காரை ஒட்டிய போதும் அண்ணியின் முக மாறுதலை உணர்ந்தவனாக கேள்வியாக நோக்கினான்.
ஒன்றுமில்லை என்பது போல் தலை அசைத்து புன்னகை செய்தவள்,
"என்னோட பிரெண்ட்ஸ் பத்தி சொல்லி இருக்கேன் இல்லை, இப்போ கூட நான் பார்க்க போறேனே... அதில ஒருத்திக்கு இன்னும் கல்யாணம் ஆகலை .. அவங்க அம்மா என் கிட்ட நீ சொன்னா இந்து கட்டாயம் கேப்பான்னு கல்யாணம்பத்தி பேச சொன்னங்க சரின்னு பேசினால், அவளும் அல்மோஸ்ட் நீங்க இப்போ சொன்ன அதே தான் சொன்னாள்... ஆனால் என்ன அவள் சொன்னது எல்லாம் ரொம்ப professional reasons.. இந்த தூக்கம் டிரஸ் மாதிரி இல்லை..."
"என்ன அண்ணி கிண்டல் பண்றீங்களா? சரி அது இருக்கட்டும் இன்னைக்கு உங்க பிரெண்ட் வீணாக்கு தானே பிறந்த நாள் அப்புறம் ஏன் இந்துவோட கம்பனிக்கு இப்போ போறீங்க?"
"இந்துக்கு ஏதோ முக்கியமா வேலை இருக்குன்னு சொன்னாள்... எப்படியும் நாங்க மூணு பேரும் எதாவது இடத்தில மீட் பண்ணி தான் ஆகணும், சரி இந்து கம்பனிலேயே மீட் பண்ணலாமுன்னு முடிவு செஞ்சோம்."
"ஆனாலும் அண்ணி உங்களோட இந்த பிரெண்ட்ஷிப் ரொம்ப வித்தியாசமா இருக்கு.. இப்படி கல்யாணம் ஆன பிறகும் எல்லா பெண்களும் நட்பை தொடர்வது இல்லை தானே..."
"அது உண்மை தான்... ஆனால் எங்களோட நட்பு அப்படி சாதாரணமானது இல்லை சஞ்சீவ்.. நாங்க மூணு பேரும் சின்ன வயசில இருந்தே பிரெண்ட்ஸ் தான்... மூணு பேருல நான் தான் பெரியவள்.. இந்துக்கும் வீணாக்கும் என்னை விடரெண்டு வயசு கம்மி..."
"இதுவே வித்தியாசம் தான். சாதரணமா எல்லோரும் கூட படிக்கிறவங்க கூட தானே நட்பா இருப்பாங்க ???"
"நான் சொல்லி இருக்கேன் இல்லையா எங்க மூணு பேர் வீடும் வரிசையா ஒரே தெருவில இருக்கும்... மூணு குடும்பமும் கிட்டதட்ட ஒரே நேரத்தில தான் அந்த காலனிக்கு கூடி வந்தது... அப்போ அந்த காலனி அவ்வளவு improve ஆகி இல்லை. அதனால வீட்டில விளையாடினாலும் நாங்க மூணு பேரும் தான் விளையாடுவோம்.. அதே போல் ஸ்கூலுக்கு போகும் போதும் கூட அவங்க ரெண்டு பேரும் அக்கா அக்கா ன்னு என் கூடவே தான் வருவாங்க.. அப்புறம் ஒரே காலேஜ்..."
"கேட்கவே interesting -அ இருக்கு அண்ணி.. ஆனால் உங்க கல்யாணம் அப்போ ஒருத்தங்க தானே உங்க கூட இருந்தாங்க?"
"ஆமாம் சஞ்சீவ். உங்களுக்கு ஞாபகம் இருக்கா? அது தான் வீணா.. எங்க கல்யாணம் தான் எதிர்பார்க்காமல் தீடிரென்று ஒரு வாரத்தில் முடிவாகி நடந்ததே ... அப்போ இந்து பிசினஸ் விஷயமா வெளியூரில் இருந்தாள்... ரொம்பவே முக்கியமான வேலை.. அதனால் நான் தான் முடிச்சுட்டு வர சொன்னேன்... நீங்க இந்துவை பார்த்தது இல்லை தானே? இன்னைக்கு உங்களுக்கு introduce செய்றேன். படிச்சு முடிச்ச உடனேயே வீணாக்கு கல்யாணம் ஆயிடுச்சு...அவளுக்கு இப்போ ரெண்டு வயசில ஒரு குழந்தை இருக்கு... இந்து தான் அடம் புடிச்சிட்டு இருக்கா... ஆனால் சஞ்சீவ், இந்து மாதிரி ஒரு நல்ல பொண்ணு மனைவியா வர கொடுத்து வச்சிருக்கணும்.. யாருக்கு அந்த லக் இருக்கோ..."
"என்ன அண்ணி பயங்கரமா பில்ட் அப் கொடுக்கீறீங்க? என்ன இந்த பாரின்ல எல்லாம் செய்யற மாதிரி எங்க ரெண்டு பேரையும் அறிமுக படுத்தி மேட்ச் பண்ண போறீங்களா?
தன்னையும் அறியாமல் வாய் விட்டு சிரித்தாள் கீதா...
"நல்ல ஐடியா தான்... ஆனால் இந்து ரொம்ப sensitive நீங்க ரொம்ப casual . அவள் எல்லா விஷயத்தையும் ரொம்ப சீரியஸா எடுத்துப்பா நீங்க அப்படியே தலை கிழே .. இப்படி நிறைய சொல்லலாம்.. அதுவும் இல்லாமல் அத்தையை பகைச்சுக்க நான் தயாராயில்லை...அதனால நீங்க கவலை பட வேண்டாம் எனக்கு மேட்ச் மேகிங் ஐடியா எல்லாம் இல்லை..."
அப்போது கீதாவின் மொபைல் போன் அடித்தது...
"...."
"ஒ நான் பக்கத்தில வந்தாச்சு..."
"...."
"இல்லை பிரச்சனை இல்லை நீ மெதுவா வா..."
போனை வைத்து விட்டு சஞ்சீவிடம்,
"இந்து வர கொஞ்சம் லேட் ஆகுமாம்.. ஆபீஸ்ல வெயிட் பண்ண சொன்னாள்...சாரி சஞ்சீவ் உங்களை வேற தொல்லை பண்றேன்..."
"அதெல்லாம் இல்லை அண்ணி... என்ன ஆனாலும் உங்க இந்துவ இன்னைக்கு நான் மீட் பண்ணியே ஆகணும்... ஆனால் அண்ணி... என்னை ஏன் இப்படி நீங்க வாங்கன்னு மரியாதையோடு பேசுறீங்க? எனக்கு ஒரு மாதிரி இருக்கு.."
"என்ன செய்ய நான் முயற்சி செய்து தான் பார்க்கிறேன்.. எனக்கும் எல்லோரையும் அப்படி பேசியே பழக்கம் ஆகிடுச்சு..."
"பொய் சொல்லாதீங்க, உங்க பிரெண்ட்ஸ எல்லாம் பேர் சொல்லி நீ வா போன்னு தானே பேசுறீங்க?
"அது பழக்கம் ஆகிடுச்சு... நீங்க எங்களுக்கு கல்யாணம் ஆன உடனேயே mba படிக்க போயிட்டீங்க... எனக்கு கொஞ்சம் டைம் வேணும்ல?
"சரி உங்களுக்கு இருபத்தி நாலு மணி நேரம் தரேன் ... அதுக்கு அப்புறமும் என்னை இப்படி நீங்க வாங்க ன்னு பேசினால் உங்க பேச்சு கா விட்ருவேன்..."
"சரி சார் முயற்சி பண்றேன்... உங்களுக்கு எல்லாமே விளையாட்டு தான் "
- Prev
- Next >>


