Page 1 of 3
14. புயலுக்கு பின் – வினோதர்ஷினி
சாந்தி அழுதாள் என்பதை விட அவளையும் அறியாமல் கண்ணில் இருந்து நீர் கொட்டியது என்பது தான் சரி. இப்படி ஒருவன் தன்னிடம் நேரில் பேசுவான் என்று யாரேனும் சொல்லி இருந்தால் அவள் நம்பி கூட இருக்க மாட்டாள். எப்படி எப்படி அந்த சுந்தரால் முடிந்தது? அவளுக்கு திருமணமாகி பத்து வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது.. பள்ளி செல்லும் குழந்தையும் இருந்தது... திருமணம் என்பது பெண்ணுக்கு வேலி என்பது எல்லாம் பொய்யா? அதுவும் நண்பனின் மனைவி என்று சொல்லிக் கொண்டு...
அவளுக்கு மேலே நினைக்கவே மனம் கூசியது. மனிதனின் மனம் ஒரு வினாடியில் பல யுகங்களையே கடக்க கூடியது. சாந்தி, அடுத்து என்ன செய்வது என்று எண்ணி கலங்கி இருந்த போதும், அவள் மனம் அவளை அமைதியாய் இருக்க விட வில்லை, பலவும் எண்ணி அவளை மேலும் கலக்கியது...
படித்திருந்தாலும், வேலைக்கு சென்றிருந்தாலும், சாந்தி தன் குடும்பம் என்னும் பாதுகாப்பு வட்டத்துக்குள் தான் இது வரை இருந்திருக்கிறாள். முதல் முறையாக அந்த வட்டத்தில் இருந்து வெளியில் வரும் போது தான் உலகத்தில் எப்பேர்ப்பட்டவர்கள் இருக்கிறார்கள் என்பது புரிந்தது.
இதற்க்கு எல்லாம் காரணம் அரவிந்த் தான் என்று அவன் மீது கோபம் வந்தது. இந்த கம்பெனி-ஐ விரிவாக்க வில்லை என்று யார் அழுதது? இந்த எண்ணம் தோன்றிய உடனேயே, அந்த நிலையிலும் அவள் மனசாட்சி அவளை உறுத்தியது. உண்மையில் அரவிந்த் இந்த கம்பனி ஆரம்பிக்க காரணமானவள் அவள் தானே? முன்பு இருவரும் அலுவலகத்தில் பணி புரிந்த போது, மாத வருமானம் இந்த அளவு இல்லை என்றாலும், மனதில் நிம்மதியும் அமைதியும் இருந்தன. சுற்றி நண்பர்களும் இருந்தார்கள். இந்த மேல் தட்டு வாழ்க்கையில் கிடைத்ததை விட இழந்ததே அதிகம்...
இப்படி பலவும் எண்ணி அவள் மனம் கலங்கி கொண்டு இருக்கையிலேயே , எப்போதும் அவளுடன் இருக்கும் தன்னம்பிக்கையும், சுய மரியாதையும் மெதுவாக விழிக்க ஆரம்பித்தன...
இந்த வாழ்க்கை அவள் விரும்பியவாறு இல்லாது இருக்கலாம் ஆனால் அரவிந்தின் கம்பெனியை நம்பி கிட்ட தட்ட நூறு குடும்பங்கள் இருந்தன. அவர்கள் அனைவரும் நல்ல முதலாளி என்று மனதார வாழ்த்தும் அளவிற்கு அவள் கணவன் தன் கம்பெனியில் பணி புரிபவர்களின் நலனையும் மனதில் கொண்டு தான் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்திருக்கிறான். கடைசியாக நடந்த விரிவாக்கமும் கூட, மேலும் சிலரை நிரந்தர பணியாளர் ஆக்குவதற்கு தான் என்பதும் உண்மை.. அப்படி அரவிந்தும் மற்ற தொழிலாளர்களும் வியர்வை சிந்தி உயர்த்திய இந்த கவிதா இண்டஸ்ட்ரீஸ்-ஐ ஒரு கயவன், பண ஆசைக்காக, பாழாக்க விடுவது பாவம்.
இப்படி ஒரு எண்ணம் தோன்ற ஆரம்பித்த உடனேயே, சாந்திக்கு சிறிது தைரியம் வந்தது. எந்த தைரியத்தில் அந்த சுந்தர் அவளிடம் அப்படி பேசினான்? அரவிந்த் அடி பட்டு ஹாஸ்ப்பிட்டலில் இருப்பதால், அவளால் எதுவும் செய்ய இயலாது என்று நினைத்தானா? இல்லை பெண் என்றால் அவனுக்கு அவ்வளவு இளக்காரமா? சுந்தரின் அறையில் இருந்து வெளியில் வரும் போது அங்கு சிலையாக நின்ற சுகந்தியின் முகம் நினைவில் வந்தது. என்ன ஒரு கொடுமை? மனைவி எதிரில் ஒரு கணவன் பேசும் பேச்சா இது?
சுகந்திக்காக அவள் மனம் வருந்தியது... இல்லை மனதை அடக்க பழக வேண்டும். இப்போது யாரையும் பார்த்து பரிதாப படும் நிலையில் அவள் இல்லை. அவள் நிலையே பரிதாபத்திற்கு உரியதாக இருந்தது. ஏதோ அரவிந்த் இல்லாததால் தன்னால் எதுவும் செய்ய முடியாது என்று கூறிய அந்த சுந்தருக்கு பதில் அடி கொடுக்க வேண்டும். இந்த பிரச்சனையில் இருந்து கவிதா இண்டஸ்ட்ரீஸ்-ஐ மீட்க வேண்டும். ஒரு வினாடி மீண்டும் தன்னால் முடியுமா என்ற கேள்வி எழுந்தது..
"இல்லை... இப்போது மனதை அலை பாய விடக் கூடாது... முடியும் என்னால் முடியும்.. நான் இந்த பிரச்சனையில் இருந்து என் குடும்பத்தையும் கம்பெனியையும் வெளியில் கொண்டு வருவேன்.... என்னால் முடியும்... " என பல முறை சொல்லி மனதை தைரியப்படுத்தினாள்.
ஒருவாறு மனதை நிலை படுத்தியப் பின் அடுத்து செய்வதை குறித்து யோசிக்க ஆரம்பித்தாள். மனதில் தோன்றியவற்றில் சிலதை ஒரு பேப்பரில் குறித்து வைத்தாள். முதலில் செய்ய வேண்டியவற்றை பட்டியலிட்டாள். நினைத்ததை செயலாற்ற தொலைபேசியை நோக்கி சென்றாள்.
அருணா, அவசர அவசரமாக அலுவலகத்தில் இருந்து கிளம்பினாள். சாந்தி அப்போது தான் அவளை அழைத்து வீட்டிற்க்கு வர சொல்லி இருந்தாள். சாந்தியின் குரலை கேட்ட பிறகு தான் அருணாவிற்கு நிம்மதியாக இருந்தது. காலையில் அவளை தனியே விட்டு விட்டு வந்தது தவறோ என்று எண்ணி அவள் வருந்திக் கொண்டிருந்தாள். சுந்தரை பற்றி சாந்தியை விட அருணாவிற்கு நன்றாகவே தெரியும். அதனால் சாந்தி சொல்லா விட்டாலும் உள்ளே என்ன நடந்திருக்கும் என்பதை அவளால் ஊகிக்க முடிந்தது. சாந்திக்காக அவள் மனம் மீண்டும் வருந்தியது. அரவிந்த் அவளை ஒரு மகாராணி போல் நடத்துவான். இப்போது அதே சாந்தி, இப்படி ஒரு கேடு கேட்டவனிடம் போய் பேச வேண்டியதாகி விட்டதே. பேசாமல், நானே சென்று இந்த சுந்தரை பார்த்து பேசி இருக்கலாம். இப்படி பலவாறு தன் பங்கிற்கு வருந்தியவாறு அருணா, சாந்தி இல்லம் வந்து அடைந்தாள்.
சாந்தி இப்போது வெளியில் செல்ல தயாராகி இருந்தாள். அழுதது தெரியாது இருக்க முகத்தை கழுவி சிறிது பௌடரும் போட்டிருந்தாள். ஆனால் அருணாவிற்கு சாந்தியை நன்கு தெரியும் என்பதால், அவளால் சாந்தி அழுதிருப்பதை அவள் முகத்தை கொண்டே அறிய முடிந்தது. ஆனால் எதையும் வெளியில் காட்டாமல், சாந்தியை பார்த்து
"கிளம்பலாமா மேடம்?" என்றாள்.
சரி என தலை அசைத்த சாந்தி,
"அருணா, எனக்கு ஒரு ஹெல்ப் செய்வீங்களா?"
"சொல்லுங்க மேடம்"
"என்னை இப்படி மேடம்-ன்னு கூப்பிடாதீங்க....."
அருணா இதை இந்த நேரத்தில் எதிர்பார்க்க வில்லை.
புன்னகைத்த சாந்தி....
"சும்மா பேர் சொல்லியே கூப்பிடுங்க... மேடம்-ன்னு சொல்லி தான் மரியாதை காட்டணும்னு இல்லையே..."
"ம்ம்ம் நீங்க முன்னாடி ITல வேலை பார்த்தீங்கல்ல... ஆனாலும் எப்படி பேர் சொல்லி கூப்பிடறது?"
"சரி அப்போ அக்கான்னு கூப்பிடுங்க...." என்று புன்னகைத்தவளை பார்த்து அசந்து நின்றாள் அருணா...
"என்ன என்ன ஆச்சு?"
"இல்லை வந்து நீங்க காலையிலே ... வந்து... நீங்க ரொம்ப அப்செட்டா இருப்பீங்கன்னு நினைச்சேன்..."
சாந்தி முகத்தில் ஒரு சிறிய நிழல் படிந்தது... விரும்பாத எதுவோ அவள் நினைவில் வந்தது புரிந்தது..
அருணா மன்னிப்புகோரும் முன், சாந்தியே பேசினாள்,
"ஆமாம் அருணா நிஜம் தான்.........சரி அதை விடுங்க... இன்னும் கொஞ்சம் நாள் நாம புத்திசாலித்தனமா வேலை செய்யாட்டி அந்த சுந்தருக்கு நம்ம கம்பெனியை தாரை வார்க்க வேண்டியது தான்...."
"அப்படி நடக்கவே விடக் கூடாது மேடம்..."
"ஆமாம், நாம இப்போ முதல்ல வக்கீல் சொன்ன அவரோட ஜூனியர்-ஐ போய் பார்ப்போம்.... உங்ககிட்ட அவங்க அட்ரஸ் இருக்க?"
"இருக்கு மேடம் … வந்து... நீங்க ஏதாவது சாப்பிட்டீங்களா மேடம்?"
"ப்ளீஸ் அருணா இந்த மேடம் எல்லாம் ஸ்டாப் பண்ணுங்க... நீங்க எனக்கு தங்கச்சி மாதிரி தான்... சோ என்னை அக்கான்னு கூப்பிடுங்க... நான் சாப்பிட்டேன்.... நீங்க சாப்பிட்டாச்சா?"
"ம்ம்ம்ம்... ஆச்சு.. ஆனால் எந்த அக்கா தங்கச்சிய வாங்க போங்கன்னு சொல்றாங்க தெரியலை...."
சாந்தி புன்னகைத்தாள்.
- Prev
- Next >>


